த.வெ.க ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலத்தை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் தற்போது ஒரு ‘தொங்கு சட்டப்பேரவை’ சூழல் உருவாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலத்தை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், எஞ்சிய 10 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்க, மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க 53 இடங்களிலும் வென்றுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். த.வெ.க 34.92% வாக்குகள் பெற்றுள்ளன. பெரும்பான்மையை தவறவிட்டபோதும் பிற கட்சிகள் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளார். அப்படி ஒரு ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் முதல்முறையாக மலரும் கூட்டணி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு த.வெ.க தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக கூறியுள்ளது. இந்த கடிதத்திற்கு கவர்னர் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

