திருச்சியில் அரசு தலைமை பொது மருத்துவமனை அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் விறு விறு என ஏறி உச்சியில் போய் அமர்ந்து கொண்டார். பின்னர் நான் குதித்து தற்கொலை செய்யப் போகிறேன் என மிரட்டல் விடுத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஸ்கைலிஃப்ட் மூலம் மேலே ஏறிச் சென்று அவரை மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேர பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கி மீட்டனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தான் நகை மற்றும் பண விவகாரத்தில் ஏமாற்றப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அவற்றைப் மீட்டுத் தருமாறு கோரி, கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட பிரச்சனையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாகக் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
