கரூர் சாலை முறைகேடு வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் சாலை போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்ற அருண், இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 23-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்தவுடன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூன் 25-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 3-ம் தேதி ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினர்.
